சேதமடைந்த மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை அகற்றக் கோரி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் சேதமடைந்த மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தாலுகாக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர துணைச் செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது :-
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். மேலும், அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடுவார்கள். இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
