`தீவிரவாத தாக்குதலுக்குதான் பதில் தாக்குதல் நடத்துகிறோம்’ -அண்ணாமலை

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-
“இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்றுள்ளது. துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவறுக்கு பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றனர். பாகிஸ்தான் என்ன செய்கிறது. இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம். நாம் எந்த நாட்டின் எல்லையையும் பிடிப்பதற்காக சண்டை போடவில்லை. நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்குதான் பதில் தாக்குதல் நடத்துகிறோம்.

இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது. இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிராக நடக்கிறது. இது இப்போது முடியாது. இந்தியாவின் நடவடிக்கையை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்கு பயப்பட வேண்டும்.
பாகிஸ்தான் நாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தானில் நாட்டுக்கு ராணுவம் அல்ல. ராணுவத்திற்கு ஒரு நாடு. ராணுவம் தான் அந்த நாட்டு அரசை கட்டுப்படுத்துகிறது. பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது. நாம் அவ்வளவு பலமாக இருக்கிறோம். நாம் நினைத்தால் ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம். ஆனால் அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகிறோம். சசிதரூர் எம்பி, இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்-அமைச்சரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
