சாதி வாரி கணக்கெடுப்பின்போது டி.என்.டி. மக்களுக்கு தனிப்பட்டியல் இடம்பெற வேண்டும்; மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் சீர் மரபினர் பழங்குடிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் நாடோடி பழங்குடியினர் தேசிய கூட்டு நடவடிக்கை இன குழுக்களின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய டி.என்.டி அரசியல் முன்னணி கூட்டமைப்பு தலைவர் சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம்,மாநில துணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மகளிர் அணி மாநில தலைவர் விண்ணரசி மல்லிகா வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*இந்திய அரசியலமைப்பு அட்டவணையில் இந்தியாவில் உள்ள 250 சமுதாய மக்களான டி.என்.டி,என்.டி,எஸ்.என்.டி ஆகிய சமுதாய சுமார் 30 கோடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசியலமைப்பு அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.
* சாதி வாரிய கணக்கெடுப்பிற்கு முன்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அட்டவணையில் 3 வது இடத்தில் சீர் மரபினர் பழங்குடியினர், நாடோடிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகிய பிரிவின் கீழ் வரும் 250 சமுதாய மக்களை சாதி வாரிய கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் தனிக்களம் அமைக்கப்பட வேண்டும்.
*இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள டி.என்.டி மக்களை ஓ.பி.சி பட்டியலில் இருந்து வெளியேற்றி டி.என்.டி .250 சமுதாய மக்களுக்கு தனி அட்டவணை அரசியலமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். *டி.என்.டி,என்.டி,எஸ்.என்.டி சமுதாய மக்களுக்கு வாழ்வாதாரம் மேம்படுத்திடவும், வேலைவாய்ப்பு வழங்கிடவும் ,இந்திய அரசியலமைப்பு அட்டவணையில் சேர்க்க நாடோடிகளாகவும் சீர்மரபினர் பழங்குடிகளாகவும் பட்டியலிட்ட பழங்குடிகளாகவும் உள்ள மக்களின் நலன் கருதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிடவும்,டி.என்.டி சாதி சான்றிதழ்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடாமல் ஒரே மாதிரியான சான்று வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,.

இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோ, பெருங்காமநல்லூர் மாயக்காள் அறக்கட்டளை நிறுவனர் செல்வ பிரித்தா, மாநிலத் துணைத் தலைவர்கள் முருகன், தவமணி தேவர், துரைப்பாண்டி, ராமமூர்த்தி, பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

