• May 14, 2025

தே.மு.தி.க.வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி மிரட்டல்

 தே.மு.தி.க.வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி மிரட்டல்

தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நல்ல தம்பிக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த நல்லதம்பி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், பொறுப்பில் இருந்து விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரேமலதாவுக்கு நல்லதம்பி எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம்

வருமாறு:-



கட்சியின் உண்மை விசுவாசி ஆகிய நான் கட்சித் தலைவர் கேப்டனால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் கேப்டனுக்கும், கேப்டனுடைய குடும்பத்தாருக்கும் தே.மு.தி.க.வுக்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். நான் மன்றத்திலும், கட்சியிலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன்.

மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த தெய்வத்திரு கேப்டனின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற இளைய கேப்டன் விஜய பிரபாகரனுக்கு கட்சி இளைஞரணி செய்லாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். தம்பியின் குரல் தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.

அண்ணி பிரேமலதா கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கட்சியின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கும், பொருளாளர் எல்.கே.சுதீஷூக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுச் செயலாளர் பிரேமலதா கடந்த 30.4.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *