கர்நாடகத்துக்கு சுற்றுலா: கடலில் மூழ்கி திருச்சி மருத்துவ மாணவிகள் 2 பேர் பலி

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவிகள் 23 பேர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி, கோகர்ணா, முருடேஸ்வருக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் கோகர்ணாவில் உள்ள குட்லே கடற்கரை அருகே ஜடாயுதீர்த்த கடற்கரைக்கு சென்றனர். மாலை 6.20 மணி அளவில் மாணவிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
அந்த சமயத்தில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மாணவிகள் கனிமொழி ஈஸ்வரன் (வயது 23), இந்துஜா நடராஜன் (23). ஆகியோர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த மணிராஜ் என்பவர், கடலில் குதித்து 2 மாணவிகளையும் காப்பாற்ற முயன்றார். ஆனால்அவரும் ராட்சத அலையில் சிக்கி கொண்டு கடலில் மூழ்கி தத்தளித்தார். இதுபற்றி அறிந்ததும் நீர்சாகச குழுவினர் விரைந்து வந்து கடலில் மூழ்கி தத்தளித்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர்,
ஆனால், மாணவிகள் கனிமொழி, இந்துஜாவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


