பணத்தை இரட்டித்து தருவதாக ஏமாற்றி ரூ.3 லட்சம் பறிப்பு; 5 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கரட்டுகாட்டைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவரிடம், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவர் ஆசை காட்டினார்.
இதை உண்மை என நம்பி மதுரைக்கு .காரில் 3 லட்சத்துடன் சிவசுப்பிரமணி வந்துள்ளார். அவரை மாநகராட்சி நீச்சல்குளம் பகுதிக்கு அழைத்துச்சென்ற முத்துக்குமார் காரில் இருந்தவாறு பண விபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இடத்திற்கு வந்த 2 பேர், தங்களை போலீஸ் என அறிமுகப் படுத்திக்கொண்டு காரில் சோதனை செய்தனர். இதனால் பயந்தது போல நடித்த முத்துக்குமார், பணப்பையை வாங்கி கொண்டு அங்கு தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.
இதை தொடர்ந்து போலீஸ் போல் வந்தவர்களும் அவர்களை விரட்டி செல்வது போல் தப்பி சென்று விட்டனர். நீண்டநேரமாக அங்கிருந்த சிவசுப்பிரமணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்,.
இதை தொடர்ந்து சிவசுப்பிரமணி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்த முத்துக்குமார், அவரது கூட்டாளிகளான பதினெட்டாம்படி, முருகபாண்டி, பாலசுப்பிரமணியன், அழகேசன் ஆகிய 5 பேரை தேடி கண்டுபிடித்து கைது செய்து பணத்தையும் மீட்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்ட போலீசாருக்கு காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டு தெரிவித்தார்.
