ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 43). மதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வீட்டை பூட்டிவிட்டு, திருநெல்வேலி சென்றனர்.
இரவில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் அலமாரி திறந்து கிடந்தது.
அதனுள் இருந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான பாபு சந்திரபிரகாஷ் மனைவி பிரியரூபாவதிக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை என மொத்தம் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் எதுவும் சிக்குமா என்று சோதனையிடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் புதிய நபர்கள் வருகை இருந்ததா? என்பது பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
