தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: கஞ்சா கடத்திய 6 பேர் சிக்கினர்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற காரின், நம்பர் பிளேட்டில் அரசு வாகனம் என்று எழுதப்பட்டு இருந்தது.
காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். கார் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 டிராவல் பேக்குகளில் மொத்தம் 20 கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரித்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை தமிழகம், கேரள மாநிலத்தில் விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த திருச்செந்தூர் ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் கீதன் (வயது 29), உடன்குடி கொத்துவாப்பா தெருவை சேர்ந்த செரீப் மகன் சாகுல் அமீது (27), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதுநகரைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் (29), இவருடைய மனைவி ஆர்த்தி (20), சண்முகம் மகன் ஹரிபாபு (30), கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னுல் ராபிக் மகன் செமியம் (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கார் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.