கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல்
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தெற்கு குருவிகுளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் ரூ.73,700 இருந்தது விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் இருந்தவர்களிடம் 60 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகளை விற்ற பணம் என்று வாகனத்தில் இருந்தவர்கள் கூறினார்கள். இருந்தபோதிலும் உரிய ஆவணம் இல்லாததை தொடர்ந்து அந்த பணத்தை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.