தூத்துக்குடியில் வெள்ள நீர் அகற்றும் பணி: 3 அமைச்சர்கள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் குடியிருப்பின் மேல்பகுதியில் தங்கியுள்ளனர்.
அமைச்சர்கள் கீதாஜீவன் , ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தூத்துக்குடி 3ம் மைல், பக்கிள் ஓடை, திரு.வி.க.நகர், வேம்படி இசக்கியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டார்கள்.