தி.மு.க.விற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தத்தினர், அப்போது சத்துணவு திட்டத்தை மறைத்து இந்த அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று கோரி ஒரு மனு அளிக்கப்பட்டது.
பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அ.தி.மு..க ஆட்சியில் தான். சென்னையில் 358 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் சத்துணவு திட்டத்தை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் என எழுதுகிறார்கள். உங்கள் படத்தை வைத்துக்கொள்வதில் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஏன் எங்கள் தலைவரின் படத்தை மறைக்கிறீர்கள்?
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமில்லை. எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும். இல்லையெனில் நாங்கள் எழுதி வைக்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள்.
இந்த அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, காவல்துறை என யாருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கி, தலைக்குனியும் நிலையில் உள்ளது. கட்சி ஆட்கள் தவறு செய்தால் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல், ஊக்கப்படுத்துகிறார். நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். தி.மு.க.விற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். எதற்காக குற்றவாளிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர்கள் ஜாமீன் எடுக்கிறார்கள். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை கூறுகிறோம்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
