கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வேண்டும்; கோரிக்கை வலுக்கிறது
கோவில்பட்டியில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் மன்றங்கள், விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்படுகின்றன. இங்கு சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் வக்கீலாக பணியாற்றிய வரலாற்று சிறப்பும் உண்டு.
தற்போது இந்த நீதிமன்றங்கள் பழமையான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. 300 வக்கீல்கள் தொழில் செய்ய்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் சிலருக்கு மட்டுமே அமரும் நிலையும், வழக்காடிகள் நீதிமன்றத்துக்கு வெளியில் காத்திருக்கும் நிலையும் தொடர்கிறது.
எனவே, கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனை வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமை தாங்கினார்.
இதில் கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் ரவிக்குமார், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மேரிஷீலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிரேசன், பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், மக்கள் நீதி மையம் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜ் பேரவை மாவட்ட செயலாளர் நாஞ்சில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.