கொடுஞ்செயலை மக்கள் மறக்கவில்லை: செந்தில் பாலாஜிக்கு டி.ஜெயக்குமார் கண்டனம்
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது நண்பர்கள், உறவினர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் இடங்களில் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கி மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் அரவிந்தின் பண்ணை வீடு மற்றும் கிணத்துக்கடவு அருகே பணப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினருடைய கல்குவாரியில் சோதனை நடைபெற்றது.
வருமான வரித்துறையினர் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆயிரம் சோதனை வந்தாலும் அதை எதிர் கொள்ளோம் என்றார்.
வருமான வரித்துறை சோதனையின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பியதாக செந்தில் பாலாஜி கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
நான்காவது நாளாக இன்றைய தினமும் வருமான வரித்துறையினர் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமைச்சரின் ஆதரவாளர்களின் இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தினார்கள்
. சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வருமான வரித்துறையினர் சோதனை பற்றியும் செந்தில் பாலாஜியின் பேட்டி குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
இதே போல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் காவல்துறை. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயக்குமார். ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா? #Karma என்றும் அவர் பதிவிட்டுள்ளார்