தெற்கு திட்டங்குளம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு அனுமதி கோரி போராட்டம்; 68 பேர் கைது
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிப்பிக்கப்படுகிறது,. இதனால் அங்கு கடைகள் நடத்திய வியாபாரிகளுக்கு மாற்று இடமாக கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கி தரப்பட்டது.
அங்கு சில கடைக்காரர்கள் மாறிசென்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சந்தையில் இருந்த விவசாயிகள் பெரும்பாலோர் தெற்கு திட்டங்குளம் முத்து நகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக தகர செட் அமைத்து காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தை தொடங்கினார்கள்.
மக்களும் அதிக அளவில் அங்கு சென்று காய்கறிகள் வங்க வந்தனர், இந்த நிலையில் அந்த இடத்தில் காய்கறி மார்க்கெட் நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி திட்டங்குளம் ஊராட்சியில் உரிய அனுமதி பெறாமல், செயல்பட்டதாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையரால் காய்கறி மார்க்கெட் தடைசெய்யப்பட்டது,
இதனால் கடந்த 25-ந் தேதிமுதல் மார்க்கெட் செயல்படவில்லை. கடைகள் காலவரையின்றி மூடப்பட்டது. உரிய அனுமதி பெற்றவுடன் மீண்டும் கடைகள் திறப்போம் என்று வியாபாரிகள் சங்க தலைவர் அழகுராஜா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இன்று காலை வியாபாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். அவர்கள் திட்டங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிக சந்தை செயல்பட சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் வட்டாட்சியர் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், மாவட்ட ஆட்சியர் வரும் வரை போராட்டத்தை தொடர்வோம் என போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அழகுராஜா, சின்ன மாடசாமி, ஜெகன், எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனர் தமிழரசன் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் மற்றும் 5 பெண்கள் உட்பட 68 பேரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்தனர். காலை 10:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1.15 வரை நீடித்தது