ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடிக்கு மேல் மோசடி; 2 பேர் சிக்கினர்
![ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடிக்கு மேல் மோசடி; 2 பேர் சிக்கினர்](https://tn96news.com/wp-content/uploads/2023/02/five-thieves-850x560.jpg)
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஸ்வரன் (28) மற்றும் சிலர் சேர்ந்து ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர்’,
இவர்கள் தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (34) மற்றும் அவரது சகோதரரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 1.2.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் வங்கி கணக்குகளிலும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூ. 30 லட்சம் பெற்று கொண்டனர்.
பின்னர் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரரை மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா அழைத்துச் சென்று, மெடிக்கல் செக்அப் மற்றும் போலி சான்றிதழ் வாங்கி கொடுத்தநற். ரெயில்வே பணிக்கு பயிற்சி என கூறி கொல்கத்தா, டெல்லி என அலைக்கழித்தும் வேலை வாங்கி கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து முத்துகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் , உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி மாரியப்பன் மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை செய்ததில் இதுபோன்று பல நபர்களிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் ரூபாய் 1 கோடியே 28 லட்சம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)