ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.ஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தலின் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.. மேலும் அவர் கூறியதாவது:-‘
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை .
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்லமுடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின்தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.,
சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி 2021 பொது தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்தது. ஒட்டு நிலவரம் வருமாறு:-
திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), – 67,300 யுவராஜா (தமாகா) – 58,396 கோமதி (நாம் தமிழர் கட்சி) – 11,629 ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) – 10,005 நோட்டா – 1,546 முத்து குமரன் (அமமுக) – 1,204
