இளமைக்கால பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் ருசிகர அனுபவங்கள்

முன்னாள் அமைச்சர் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய இளமைக்கால பொங்கல் [பண்டிகை கொண்டாட்ட அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
தமிழர் வாழ்வில் திருநாளாக கொண்டாடப்படுவது பொங்கல் திருநாளாகும்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் தமிழர் பூமியில் விளைச்சல் பெருகி வீடு சேரும் காலம் தைத்திருநாளாகும்.
பழயனவற்றையெல்லாம் எரித்து, பொசுக்கி விட்டு புதுமையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்குகின்ற நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
இந்த நாளினை வழக்கம்போல் இன்றும் தமிழகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது. நேற்றுவரை உள்ள சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து, இன்று முதல் புதிய நாளாக மலரும் என்ற நம்பிக்கை பொங்கல் திருநாளில் நம்மிடையே உண்டாகியுள்ளது.
என்னுடைய இளம் வயதில், பொங்கல் நாள் வந்துவிட்டாலே அந்த நான்கு நாட்களும் மகிழ்ச்சி வெள்ளம் புரண்டோடும். எங்கள் வீடு புதுக்கோலம் பூண்டு விடும். போகி அன்று வீட்டில் உள்ள பழையனவற்றையெல்லாம் எடுத்து வீதியில் போட்டு கொளுத்தி அந்த நெருப்பின் கத கதப்பை அனுபவித்தபடி, இளைஞர்களுக்காக விற்கப்படும் மேளத்தை வாங்கி அடித்து மகிழ்வது சந்தோஷமாக இருக்கும்.

எனக்கு எப்போதும் நண்பர்கள் வட்டம் அதிகம், எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் எல்லாம் அப்போது ஓரணியாகி விடுவோம்.
அதற்கு மறுநாள் வீட்டில் பொங்கல் என்றாலும் என்னுடைய சிந்தனை எல்லாம் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும்.
என்னுடைய உயிருக்கும் மேலான புரட்சித் தலைவரின் படம் எப்படியும் அன்று வெளிவந்துவிடும். அந்தப் படத்தை முதல் காட்சியிலேயே பார்த்து விட வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருக்கும். காரணம், புரட்சித்தலைவரின் படம்தான் எங்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும், சமூக அக்கறையையும் ஏற்படுத்தியது.
புதுத்துணி உடுத்தி, பொங்கல் சாப்பிட்டு விட்டு நானும் நண்பர்களும் சைக்கிளை எடுத்துக்கொண்டு தியேட்டரை நோக்கி புறப்பட்டு விடுவோம். அதற்கு அடுத்த கட்டங்களில் மோட்டார் சைக்கிள் எங்களுடைய வாகனமாக மாறியது.
வீட்டில் பொங்கல் ருசித்து, தியேட்டரில் தலைவரின் படத்தை ரசித்து நண்பர்களுடன் கூடி குதூகலித்து அன்றைய தினத்தை மகிழ்ச்சியான நாளாக மாற்றம் செய்வோம். அதற்கு மறுநாள் என்றால் அது, திருவள்ளுவர் தினமாகவும் மாட்டுப்பொங்கலாகவும் எங்கள் பகுதியில் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த நாள், முதல் நாளை விட அதிகபட்சமான மகிழ்ச்சியை எங்களுக்கு உண்டாக்கும். இளைஞர்கள் பட்டாளம் மாட்டு வண்டியில் ஏறி ஊரினை, நகரினை வலம் வருவோம். அது முடிந்ததும் மீண்டும் திரையரங்கம் நோக்கி சென்று தலைவரின் படத்தை மீண்டும் பார்த்து எங்கள் சக்தியை அதிகரித்துக்கொண்டு வருவோம்.
தொடர்ந்து காணும் பொங்கல் களைகட்டி விடும். திருவிழாவைப் போல கடற்கரையோரத்தில் கடைகள் நிறைந்திருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். அதற்குள் சங்கமித்து பொருட்களை வாங்குவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். வாழ்வில் மறக்க முடியாத திருநாளாகும்.
அன்றைய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. மாசு ஏற்படுவதைத் தவிர்க்க புகையில்லா போகி என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். இருந்தாலும் பழையனவற்றை இந்த நாளில் அகற்றுவதை நாம் வழக்கமாகவே கொண்டுள்ளோம். புதியனவற்றை அடைவதை லட்சியமாக வைத்துள்ளோம். இந்த பொங கல் நாளில் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது.
பல்வேறு சோதனைகளை எல்லாம் கடந்து நாம் எதிர்பார்ப்பதை அடைந்திடக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோம். வரண்டு கிடந்த பூமியை பசுமையாக மாற்றி விளைச்சல் காண்பவர்கள் நாம். நம்முடைய சக்தி அளப்பரியது, எவருக்கும் அடி பணியாதது.
நமது பூமியில் வறுமை இல்லாத நிலையும், வளமான சூழலும் நிரந்தரமாக்கப்பட வேண்டும். அந்த நிலையை நாம் அடைந்திட இந்த பொங்கல் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.
கொடுமைகளை எல்லாம் முடித்து நன்மைக்கு வழிவகுப்போம். நமது கனவை நினைவாக்குவோம், எதிர்காலம் நமதென்ற லட்சியத்துடன் செயல்படுவோம்
மேற்கண்டவாறு டி,.ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.
