கோவை கார் குண்டுவெடிப்பு: தமிழக மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்- டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தி.மு.க. அரசு வரும்போதெல்லாம், இரண்டு விஷயம் தலை தூக்கும். தீவரவாதம், வெடிகுண்டு கலாச்சாரம் தான் . இது தி.மு.க. ஆட்சியில் எப்போதும் நடக்கின்ற விஷயம். 89, 91 ம் ஆண்டு , தி.மு.க. ஆட்சி இரண்டாண்டு காலம் தான் இருந்தது. அந்த ஆட்சி எதனால் கலைக்கப்பட்டது. தீவிரவாத்த்தை ஊக்கப்படுத்தியதால் கலைக்கப்பட்டது.
அதைப்போன்று இந்த முறையும் வன்முறை , பிரச்சினைகள் உருவாவது தி.மு.க. ஆட்சியில் சர்வசாதாரணம். கூஜா வெடிகுண்டு, பைப் வெடிகுண்டு, இப்போது கார் சிலிண்டர் வெடிகுண்டு, இதை தடுக்க , நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசாங்கத்திற்கு திராணி கிடையாது. ஒரு அராசங்கம் என்ன செய்ய வேண்டும். வரும் முன் காக்க வேண்டும் ,அது தான் ஒரு அரசாங்கத்தின் புத்திசாலித்தனம்.
வந்த பின் தவிக்கிறது . திறமையில்லாத அரசாங்கம். பல பத்திரிகைகளில் என்ன சொல்றாங்க , அவங்க ஆறு இடத்தில் திட்டமிட்டு இருக்காங்க என செய்தி சொல்லுது. துரதிருஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால், அங்கேயே வெடித்து விட்டது.
ஆறு இடத்துல வெடித்து இருந்தால் எத்தனை உயிர் போயிருக்கும். 98 ம் ஆண்டு எத்தனை பேர் இறந்தாங்க? 52 பேர் இறந்தாங்க. முன் கூட்டியே நிர்வாகம் ஏன் கவனிக்கவில்லை.
அரசும் கவனிக்கவில்லை. காவல் துறையும் கவனிக்கவில்லை. அதனால் வருமுன் காக்க தவறியது இந்த தி.மு.க. அரசு, இந்த தாக்குதல் எப்படினா? ஒற்றை ஓநாய் தாக்குதல் என பெயர் வைத்துள்ளார்கள். இதை காவல் துறை, நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை ஏன் கணிக்கவில்லை. எங்க அ.தி.மு.க. ஆட்சியிலும் , இதே காவல் துறை தான். அப்பப்போ தகவல் தந்து, உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள்.
எல்லா அரசாங்கத்திலும் இது போன்ற விஷயம் தலைத்தூக்கும். அதை ஆரம்ப கட்டத்திலே முறியடிப்பது தான் புத்திசாலியான அரசாங்கம். மக்களை காக்கும் அரசாங்கம், திறமையான அரசாங்கம் அதை தான் அ.தி.மு.க. செய்தது.
எங்கள் ஆட்சியில் வகுப்புவாதம் , வன்முறை , தீவிரவாதம் பிரச்சினை இல்லை. அதுபோன்று, துப்பாக்கி, வெடிகுண்டு கலாச்சாரம் கிடையாது. ஆனால், இது எல்லாம் தி.மு.க. ஆட்சியில் சர்வசாதாரணமாக உள்ளது.
தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகின்றதோ? இவையாவும் சர்வசாதாரணமாக இருக்கும். மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு காவல் துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில போலீஸ் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் கடமையை செய்யவேண்டும். மாநில போலீஸ் என்ன தூங்குகிறதா?
ஒட்டுமொத்தமாக கணிக்க தவறியதால் , பெரும் ஆபத்து ஏற்பட இருந்தது. ஆனால் கார் வெடிகுண்டோடு போனது. கார் குண்டு வெடிப்பை கூட அவர்களால் கணிக்கமுடியவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் என்ன விரும்புவார்கள் அமைதியான வாழ்வை, அதை கூட கொடுக்க இந்த அரசாங்கம் தவறினால், அ.தி.மு.க. குரல் கொடுக்க தயங்காது.
இவ்வாறு டி,ஜெயக்குமார் கூறினார்.