தூத்துக்குடியில் அரசு பஸ்களின் அவல நிலை பற்றி புகார்: ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடுகள் பயோ மெட்ரிக் முறையில் இருப்பதை பார்வையிட்டார். வண்டி எண், தேதி, எத்தனை லிட்டர் டீசல் போட்டது என்ற டீசல் போடுவதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பேருந்து பழுது செய்வதை பார்வையிட்டு பழுது நீக்குவது பற்றிய செயல்முறைகளை கேட்டறிந்தார்.
மழைக்காலங்களில் மேற்கூரையில் இருந்து பஸ்சுக்குள் மழைநீர் வருவதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் பஸ்களை ஆய்வு செய்து புதிய முறைப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பஸ் இருக்கைகள், என்ஜின், ஆபத்து நேரத்தில் வழி ஆகியவற்றை பார்த்து கேட்டறிந்தார்.
மேலும், பஸ்களில் எவ்வளவு லக்கேஜ் வைப்பது, எத்தனை சீட் இருக்கிறது, எத்தனை பேர் செல்லலாம் என்று ஆய்வு செய்தார். பணிமனையில் மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்குவதால் அதை ஊழியர்கள் சரி செய்ய கோரிக்கை வைத்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கூறுகையில், “திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்திற்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர் பகுதிக்கு அருகில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்துள்ளோம். திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படுகிறது ” என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது , அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஜி.பழனியப்பன், வட்டாட்சியர் செல்வக்குமார், அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.