கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, பெண் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை ; தூத்துக்குடி பி.சி.ஆர். நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி காசிலிங்கபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட விதவை பெண் பாப்பா ( வயது 47) இவரை கடந்த 2.11.2017 அன்று அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளர் விமல்காந்த், உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகிய இருவரும் அடித்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினர்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி பி.சி.ஆர். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் , தனிநபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனையை உறுதிசெய்த நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு விபரங்களை மதிய அமர்வுக்கு தள்ளிவைத்தார்.
தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள விமல்காந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் சென்னையில் வசித்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்திமதி, பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்களம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
மதிய அமர்வின் போது நீதிபதி சுவாமிநாதன் தண்டனை விவரங்களை அறிவித்தார். அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுவிமல்காந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.26ஆயிரம் அபராதம் விதித்தார். இதில் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் பூங்குமார், பாப்பா தரப்பில் வக்கீல் அதிசயகுமார் ஆஜரானார்கள்.
