உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ தேன் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியின் போது டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது. பதவி ஆசை கொண்ட பன்னீர்செல்வம், வெவ்வேறு துறை அமைச்சர்களிடம் இருந்து அவருக்கு தேவையான துறைகளை பிரித்து எடுத்துக் கொண்டு செயல்பட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியில் வேறு எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படாமல் இருந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் துறையில் மட்டும் ஊழல் புகார் சொல்லப்பட்டது. உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் இருக்கிறார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போல், வசூல்ராஜா ஓ.பி.எஸ்.
அவரது பண்ணை வீட்டில் நடத்திய ஆலோசனையில் 50 பேரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
சசிகலா, டி.டி.வி .தினகரனுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழகத்தில் தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு அடாவடி வசூல், கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஆகியவை தொடர்கதையாகி வருகின்றன.
காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கஞ்சா, குட்கா, பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு காவலர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.