கோவில்பட்டியில் நடுரோட்டில் சாய்ந்த மரம்; மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மையம் மற்றும் ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. அதன் அருகில் சாலையோரம் வாகை மரம் இருந்தது.
மரத்தை தாண்டி உரிமையியல் நீதிபதி குடியிருப்பு பகுதி உள்ளது.
இந்த் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இருந்த இந்த மரம் பகல் 12 மணி அளவில் திடீர் என சாய்ந்து விழுந்தது. நல்லவேலையாக அந்த சமயத்தில் பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. சாலையை கடந்து செல்வோரும் இல்லை. இதனால் யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.
மரம் சாய்ந்து விழுந்ததில் அருகில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்தது. வயர்கள் அறுந்து ரோட்டில் கிடந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அதிகாரி அருள்ராஜ் தலைமையில் வீரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்தனர்.
இதை தொடர்ந்து மீட்பு பணி தொடங்கியது. அந்த பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கபட்டது. மரத்தை வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.