கோவில்பட்டி `கோணல்’ பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சாய்ந்த லாரி; போக்குவரத்து கடும் பாதிப்பு
கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு, மெயின் ரோடு சந்திப்பில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் தடுப்பு சுவர் நேராக இல்லாமல் கோணலாக காட்சி அளித்தது.
பாலத்தின் எதிர்புறமும் இதே போல் கோணலாக தான் பாலம் உள்ளது. ஓடை ஆக்கிரமிப்பினால் மக்கள் அனுபவித்து வந்த துன்பத்தை , இப்போது இந்த கோணல் பாலத்தை கடந்து செல்ல அதே துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்துக்கு சாம்பல் பாரம் ஏற்றி சென்ற லாரி அந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்ட்டில் இருந்து புதுரோடு வழியாக மெயின் ரோட்ட்டில் வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த டிரைவர் கலைச்செல்வம் ஒட்டினார்.
லாரி கோவில்பட்டி மெயின் ரோட்டில் மாதாங்கோவில் தெரு- மெயின்ரோடு சந்திப்பில் குறுகிய பாலத்தினை கடந்த போது தடுப்பு சுவரில் மோதியது. அந்த சமயத்தில் லாரியின் டயர் வெடித்து, பட்டை உடைந்து, பாதி சாய்ந்த நிலையில் நின்றது.
காலை நேரத்தில் நடந்த விபத்து என்பதால் அப்பகுதியில் வந்த பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள், மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்தவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையில் மாற்றி விட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். லாரியில் பாரம் அதிகம் இருந்ததால் வெடித்த டயரை கழற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.
கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை நகர்த்த முயற்சி எடுக்கப்பட்டது, மேலும் தடுப்பு சுவரை சிறிது உடைத்து லாரியை நகர்த்தி டயர் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதாங்கோவில் தெரு சந்திப்பில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் வாகனங்கள் சிறிது நேரம் அனுமதிக்கப்படாமல் திருப்பி விடப்பட்டன,
மேலும் எட்ட்டயபுரம் சாலையில் இருந்து வந்த கனரக வாகனங்கள் புதுரோடு, வேலாயுதபுரம் ரோடு பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன, இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் சுற்றி சென்றனர்.
கோணல் பாலம் அமைக்கப்பட்ட போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு விதமாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளவில்லை.
இனிமேலாவது இந்த கோணல் பாலத்தை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி வகை காணவேண்டும் என்று மக்கள் குரல் ஒலிக்க தொடங்கி இருக்கிறது.