அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திரதின கொண்டாட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் ஆலோசனை
.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டு நிறைவடைவதையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், பலதரப்பட்ட கடைகளிலும், பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு கலைக்குழுக்கள் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்ததார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்