இன்னொரு தாய் …(சிறுகதை)

காலை 8மணி. நெல்லை சந்திப்பில் நின்ற அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஐந்து நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டது. ரெயில் சிக் புக் சிக்புக் என்று நகர்ந்தபோது கையில் பன்னுடன் பிளாட்பாரத்தில் சிறுமி…அம்மா அம்மா என்று அழுது கொண்டே ஓடிவந்தாள்..
அந்த சிறுமியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கையில் வைத்திருந்த பன்னை சாப்பிடாமல் அங்கும் இங்கும் தேடியது.
பின்னர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்து தண்டவாளத்தையே பார்த்து கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அடுத்த பதினைந்து நிமிடத்தில் மற்றொரு ரெயில் வேகமாக அந்த ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த சிறுமி எழுந்து அந்த ரெயிலில் இருந்து அம்மா… அப்பா இறங்குகிறார்களா? என்று தேடினாள்.
பெட்டியுடன் நடந்து சென்றவர்கள் பின்னால் ஓடி வந்த சிறுமியை பார்த்தவர்கள்…. பிச்சை கேட்கிறதோ… என்று நினைத்து ..ஐம்பது பைசா நாணயத்தை வீசிவிட்டு சென்றார்கள்.
அந்த சிறுமி அதை எடுக்காமல் ஏங்கி ஏங்கி அழுதாள். கையில் வைத்திருந்த பன்னில் கண்ணீர் துளிபட்டு சிதறியது. சிறிது நேரத்தில் அந்த ரெயிலும் அங்கிருந்து கிளம்பி சென்றது. அந்த சிறுமி பரிதாபமாக ரெயிலை பார்த்து கண்ணீர் சிந்தியபடி நின்றாள். அந்த சிறுமியை சுற்றி ஐம்பது பைசா நாணயங்கள் சிதறிக்கிடந்தன
அந்த சிறுமி அதை எடுக்காமல் ரெயில் சென்ற பாதையை வெறித்து பார்த்தபடி நின்றாள். அப்போது மூன்று பெண் குழந்தைகளுடன் ஒரு பிச்சைக்காரபெண் யாரையோ திட்டியபடி அங்கு வந்தார். அவரது குழந்தைகள் அவரது கிழிந்த சேலையை பிடித்து இழுத்தபடி அழுது கொண்டு வந்தன.
அவர் அந்த குழந்தைகளை அமைதிபடுத்தினார். பசி அந்த குழந்தைகளை வாட்டியது தெரிந்தது. பிளாட்பார பெஞ்சில் போய் உட்கார்ந்தார் அந்த பெண். ரெயிலில் வந்த பயணிகளிடம் வாங்கிய சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்தார்.
அவரது மூன்று பெண் குழந்தைகளும் எனக்கு உனக்கு என்று கையை நீட்டின. ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒருபிடி சாப்பாட்டை கொடுத்தார். மீதி உள்ள சாப்பாட்டில் ஒரு பிடியை தான் சாப்பிடலாம் என்று பிச்சைக்கார பெண் வாய்க்கு கொண்டு சென்ற போது மற்றொரு இரண்டு கைகள் அந்தபெண்ணை நோக்கி நீண்டன.
யார் அது.. என்று பார்த்த போது ரெயிலில் பெற்றோரை தேடிய சிறுமி தனக்கு உணவு தரும்படி கையை நீட்டினாள்..
அந்த பிச்சைக்கார பெண் தான் சாப்பிடாமல் அந்த உணவை அந்த சிறுமிக்கு கையில் கொடுக்காமல் வாயில் ஊட்டிவிட்டாள்.
அந்த சிறுமி ஆனந்த கண்ணீருடன் உணவை சாப்பிட்டாள். அந்த சிறுமியிடம்…யார் நீ..எந்த ஊரு…அப்பா அம்மா யாரு என்று பிச்சைக்கார பெண் கேட்டார்.
அந்த சிறுமி அம்மா என்றபடி அந்த பெண்ணின் கிழிந்த புடவைக்குள் வந்து தஞ்சம் புகுந்தது. அந்த சிறுமியின் முதுகை தடவிக்கொடுத்தார் அந்த பெண்.
ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிற நேரத்தில் நான்காவது ஒரு பெண் குழந்தையா…?அவர் கட்டி அணைத்து கொண்டார்.
இன்னும் நாலு இடங்களில் அலைந்து பிச்சை எடுக்க வேண்டும்..பரவாயில்லை.யார் பெற்ற பிள்ளையோ…யாரும் தேடிவந்தால் கொடுப்போம் என்று நினைத்தார்.
சிறிது நேரத்தில் அந்த பிச்சைக்கார பெண்ணின் மூன்று குழந்தைகளுடன் அந்த சிறுமி சிரித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த பன் சிதறிக்கிடந்த காசுகளின் நடுவில் கிடந்தது.
குழந்தைகளுடன் சிறுமி விளையாடுவதை அந்த தாய்மனம் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தது. இன்னொரு தாயிடம் அடைக்கலம் புகுந்த அந்த சிறுமியை ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அதன் கையில் பன்வாங்கி கொடுத்துவிட்டு அந்த சிறுமிக்கு தெரியாமல் ரெயில் ஏறி இரண்டாவது மனைவியுடன் பயணம் செய்த அந்த சிறுமியின் தந்தை..
நீ சொன்ன மாதிரியே..என் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை ரெயில் நிலையத்தில் விட்டுட்டு வந்திட்டேன் என்று பெருமையுடன் சொன்னபடி பயணம் செய்தார்.
அந்த ரெயில் நாகர்கோவில் சென்றது. ரெயிலில் இருந்து இறங்கி, அடுத்த தண்டவாளத்தை வேகமாக கடந்த அவர்கள் மீது வேகமாக வந்த ரெயில் சக்கரங்கள் ஏறி பழிதீர்த்து கொண்டபோது அவர்கள் போட்ட அலறல் சத்தம் காற்றோடு கலந்தது.
வே.தபசுக்குமார்,தூத்துக்குடி,
