• June 6, 2025

அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுகள் ரகசியம்-துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் பேட்டி

 அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுகள் ரகசியம்-துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபிறகு கட்சியின் அமைப்புசெயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
65 தலைமைக்கழக நிர்வாகிகள்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரது பதவி அதாவது பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு, கழக சட்டதிட்ட விதிகளில் இடமிருக்கின்ற சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்தவேண்டும் என்ற வகையில், எடப்பாடி பழனிசாமியை அதாவது கழக தலைமை நிலைய செயலாளரை, தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும், கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்றைக்கு தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான அதாவது கிட்டத்தட்ட 74 நிர்வாகிகள் உள்ள சூழ்நிலையில்,தற்போது 65 தலைமைக்கழக நிர்வாகிகள் வந்துள்ளார்கள். 4 பேர் இந்த கூட்டத்திற்கு வர இயலவில்லை என்று கடிதம் அளித்துள்ளார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உடல் நிலை சரியில்லை. சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், தான் மருத்துவமனை சென்றுள்ளதாக தகவல் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார்.
கழக அமைப்புச் செயலாளர் புத்திசந்திரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளார். கழக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டீஸ் செல்வராஜ் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். எனவே 5 பேர் மட்டுமே இந்த கூட்டத்திற்கு வரவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீதி 65 பேர் கலந்துகொண்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்பது, வருகின்ற 11.7 .2022 அன்று பொதுக்குழுக் கூட்டம் கூட்ட அழைப்பிதழ் தபாலில் அனுப்பவேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பல பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அது முடிவும் செய்யப்பட்டது.

இவ்வாறு டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.:-
கூட்டத்தில் என்ன முடிவு?
கேள்வி:-.கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது.

பதில்:- அவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்படவேண்டியது. எதைச் சொல்லவேண்டுமோ அதனை சொல்கிறேன். எதை சொல்லக்கூடாதோ அதை சொல்ல மாட்டேன். சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லிவிடுகிறேன்.

கேள்வி:- அன்று ஒற்றை தலைமை குறித்து குறிப்பிட்டீர்களே?

பதில்:- அது சொல்லவேண்டிய விஷயம். சொல்லவேண்டிய விஷயத்தை சொல்கிறேன்.ஆனால் சொல்லக்கூடாத விஷயத்தை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன்.

கேள்வி:- எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிப்பாக வருவதற்கு வாய்ப்பு உண்டா.

பதில்:- இன்றைக்கு எடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல கருத்துக்கள் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் அறிவிப்புகளாக வருகிறதா இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.

தூங்குவது போல் பாசாங்கு
கேள்வி:- ஒ.பன்னீர்செல்வம் நேற்று இந்த கூட்டம் செல்லாது என்று அறிக்கை அளித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் எதுவும் தன்னை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துள்ளாரே.

பதில்:- முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கிட்டத்தட்ட 51 நிமிடம் கழகத்தின் சட்ட விதிகளை தெளிவாக எடுத்து கூறியுள்ளார். பிரிவு 20 அ-7 இதிலே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு தலைமை கழக நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள். அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கின்ற நிலையிலே, நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த கூட்டம் இன்றைக்கு நடைபெற்றது. இந்த அடிப்படை விதியே அவருக்கு தெரியவில்லை என்றால் நான் என்ன சொல்வது. தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றாரா. புரிந்தும் புரியாமல் இருக்கின்றாரா. அறிந்தும் அறியாமல் இருக்கின்றாரா. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது.

தி.மு.க.வின் துரோகம்

கேள்வி:- தி.மு.க.வின் முரசொலியில் அ.தி.மு.க. துரோகத்தால் தொடங்கப்பட்ட கட்சி என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளதே

பதில்:- இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கின்றது. தமிழகத்திற்கு துரோகத்தை இழைத்து, தமிழனுக்கு துரோகம் இழைத்த ஒரு கட்சி தி.மு.க.தான். இது அனைத்து தமிழனுக்கும் தெரியும். காவிரி நதி நீரில் துரோகம். கச்ச தீவில் நமது மீனவர்களின் உரிமையை தாரை வார்த்து அளிப்பதற்கு பச்சைக் கொடி காட்டியது தி.மு.க. காவிரி நதி நீரில் ஹேமாவதி அணை குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி தருவதற்கு உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்குத் தொடுத்தபோது, அன்றைக்கு விவசாயிகளை வற்புறுத்தி சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து வழக்கை வாபஸ் பெற்று விவசாயிகளுக்கு துரோகம் செய்தது.
முல்லை பெரியாரில் துரோகம். தமிழ் இன முல்லிவாய்க்கால் படுகொலை. 1 1/2 லட்சம் பேர் இலங்கையில் உள்ள நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைக்கு யாருடைய ஆட்சி இருந்தது. இவர்கள் ஆதரவை விலக்கிக்கொண்டால் காங்கிரஸ் ஆட்சி போயிருக்கும். ஆனால் இவர்கள் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அன்றைக்குக் கருணாநிதி முதலமைச்சராக இருந்து ஆதரவு கொடுத்த நிலையிலே,உங்களுக்கு தருகின்ற ஆதரவை நாங்கள் வாபஸ் வாங்குகிறோம் ,எங்கள் இனம் அங்கு அழிக்கப்படுகின்றது, இதனைத் தடுத்த நிறுத்தவேண்டும் என்று சொன்னார்களா.சொல்லவே இல்லை.
இதனால் என்ன விளைவு ஏற்பட்டது. இன்றைக்குத் தமிழ் ஈழ மக்கள் தி.மு.க.வை நினைத்து கொதித்துபோயியுள்ளார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டு, இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குழந்தைகளை படுகொலை செய்து, எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அழித்த அழிக்க காரணமாக இருந்தது தி.மு.க. இவர்கள் துரோகத்தைப் பற்றி பேசலாமா. துரோகத்தின் மொத்த உருவமே தி.மு.க.தான்.

பன்னீர்செல்வத்தின் அடையாளம்
கேள்வி:- இங்கு ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் உள்ள பேனர் கிழிக்கப்பட்டுள்ளதே.

பதில்:- இதனை மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது அம்மாவில் ஒ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதே…

பதில்:- ஒரு துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்றுதான் சொல்லவேண்டும். அவர் ஆரம்பக்கால கட்டத்திலிருந்து, தான் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கு செய்த துரோகம் எல்லாம் எந்த அளவிற்கு செய்தார் என்பதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். அந்த அளவுக்கு துரோகம் என்பதே அவரின் உடன் பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட நிலையில் எப்படி நமது அம்மாவில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ள முடியும்.அதனால் வைத்துக்கொள்ளவில்லை.

கேள்வி;- ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று நிலையில் இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்தப்பட்டுவிட்டதா.? பதில்…..உங்களுடைய கேள்விகளுக்கு எல்லாம் 11 ம் தேதி பொதுக்குழுவில் பதில் தெரியும்.

கேள்வி:-.ஓ..பன்னீர்செல்வத்தை துரோகத்தின் அடையாளம் என்று சொல்கிறீர்கள். ஆனால் மறைந்த முதல்வர் அவரை விசுவாசத்தின் அடையாளம் என்று தெரிவித்துள்ளாரே
பதில்:- புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற விஷயங்களை பாருங்கள். ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தற்போதைய முதலமைச்சரை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறார் முதல்வர் என்றால் இதனை கழகத்தின் எந்த தொண்டனாவது ஏற்றுக்கொள்வானா. இது பற்றி நிறைய உதாரணங்களை எங்களால் சொல்ல முடியும். அம்மாவுக்கு பிறகு என்ன நடந்தது.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் நீடிக்கின்றாரா?
பதில்:- அவர் பொருளாளர் பதவியில் நீடிக்கின்றாரா இல்லையா என்பது எல்லாம் பொதுக்குழுதான் முடிவு செய்யும்.

கேள்வி:- .ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை உங்கள் தரப்பில் கட்டாயப்படுத்தி அழைக்கின்றார்கள் என்று மகளிர் அணியினர் தெரிவித்துள்ளார்களே?.

பதில்:- அவர்கள் எல்லாம் என்ன குழந்தைகளா. அனைவரும் விபரம் தெரிந்தவர்கள். நாட்டு நடப்பு குறித்து தெரிந்தவர்கள். கட்சியில் என்ன நடக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி கட்டாயப்படுத்தி அழைக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இன்றைக்கு அனைத்தும் ஒற்றை தலைமை முடிவுதான். அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி என்பதுதான் ஒட்டுமொத்த கட்சியின் நிலை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *