பார்வையற்றவரின் இசை ஆர்வம்; கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உதவி
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். ரசிகர்களின் எதிர்பார்ப்பினை ‘விக்ரம்’ படம் முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடலை அண்மையில் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளி திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதை தொடர்ந்து திருமூர்த்தியை நேரில் அழைத்து கமல் பாராட்டினார். மேலும் அவரை தனது இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பிரபலமானவர் திருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.