‘எந்த ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்’ -பொதுமக்கள் உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் பகுதியில் “மாற்றத்தை தேடி” எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி, கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலீப், காசிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில் கூறியதாவது:-
‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு என்பது நம்மிடம் உள்ள கோபத்தை நீக்கிவிட்டு நம்முடைய குடும்பத்தையும் நம்முடைய சமூகத்தையும் ஒற்றுமையாக வைக்க வேண்டும், நம் குடும்பத்தினர் வாழ்க்கையும் நம்மை சுற்றியுள்ளவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்,
கோபத்தினால் ஏற்படும் விளைவுக்கு பதிலுக்கு பதில் விளைவு என்பது தீர்வாகாது, உங்கள் குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் சமூகத்தில் சிறந்தவர்களாக இருக்கமுடியும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை கெடுத்து கொள்ள வேண்டாம். போதைக்கு அடிமையாகாமல் தங்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி, சிறப்பாக கல்வி பயின்று சாதனையாளர்களாக வரவேண்டும். பெண்கள் செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய நிகழ்வாக கீழ்கண்டவாறு உறுதி மொழி ஏற்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உறுதிமொழியை வாசிக்க பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுதுகொண்டனர், உறுதிமொழி விவரம் வருமாறு:-
*நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம்.
*எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம்.
*எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்.
இவ்வாறு உறுதிமொழி எடுத்தனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் செய்திருந்தனர்.