மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் மனு தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
மேலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்தது. இன்று ப.சிதம்பரம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று அதன்பின்பு மனுத்தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. தரப்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகம், தர்மர் இருவரும் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதை தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 1ம் தேதி நடக்கிறது, மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 3 ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்கள் வேட்புமனுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உறுப்பினர்கள் முன்மொழியாமல் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பரிசீலனை அன்று நிராகரிக்கப்படும். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூர்வமாக தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பார்.