கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; விளாத்திகுளம் அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு

விளாத்திகுளம் அருகே உள்ள வி. வேடப்பட்டி கிராமத்தில் பருத்தி, மிளகாய், முருங்கை, எலுமிச்சை, தென்னை, கொய்யா, பனை, வாழை, பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மிக வளமையான வைப்பாறு ஆற்றுப்படுகை கொண்ட வண்டல் மண் வளம் கொழித்து கொண்டு உள்ளது. இந்த வளமையான மண்ணில் விவசாயத்தை சீரழிக்கும் வகையில் தனியார் காற்றாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வேடப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் காற்றாலை நிறுவ தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேற்படி தீர்மானத்தின் படி காற்றாலை நிறுவனம் தனது காற்றாலை அமைக்கும் முயற்சியை கைவிட தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் முன்வரவேண்டும் என்று கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவி நாயுடு முன்னிலை வகித்தார்.

இந்த போராட்டத்தில் மாநில ஆடு வளர்ப்போர் பிரிவு தலைவர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராகுல், கோவில்பட்டி நகர தலைவர் ராமசாமி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் கோவில்பட்டி கோட்டாட்சியரின் உதவியாளர் இசக்கி ராஜாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
