கோவில்பட்டியில் வாலிபர்,பெண் அடுத்தடுத்து வெட்டிக்கொலை; ஒரே கும்பல் கைவரிசையா?

Oplus_16908288
கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு வள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பிரகதீசை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத பிரகதீஸ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை ஓட விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள மற்றவர்களால் வெட்டப்பட்டார்.

இந்த காட்சியை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்

இதற்கிடையே அறிவாளால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சரிந்து விழுந்த பிரகதீஸ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது பற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். பிணமாக கடந்த பிரகதீசை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனடியாக கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட தொடங்கினார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முயற்சித்த சமயத்தில், அதாவது பிரகதீஷ் கொலை செய்யப்பட்ட அரை மணி நேரத்திற்குள் செண்பகா நகர் 3வது தெருவில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

செண்பகா நகர் 3வதுதெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரகதீஷ் மற்றும் கஸ்தூரி ஆகியோர் அடுத்தடுத்து மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 கொலைகளையும் செய்தது ஒரே கும்பலா? அப்படியானால் கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
