2 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் ;மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 2 கிராம ஊராட்சிகளில் நடந்தது.
2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை புதூர் ஊராட்சி ஒன்றியம் முத்துசாமிபுரம் கிராம ஊராட்சி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் பொம்மையாபுரம் கிராம ஊராட்சிகளில் மே-26ம் தேதி முதல் 30ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
முத்துசாமிபுரத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கதிரவன், சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரவள பயிற்றுநர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.
சமூகத்தணிக்கை மாவட்ட வளஅலுவலர் மணி கூட்டத்தை வழிநடத்தினார். சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன் வட்டார வள பயிற்றுநர்கள் சிவக்குமார், சிவகுருநாதன், மணி, முத்துராஜ், சிவக்குமார் இளங்கோ. அனிதா, பணித்தளப் பொறுப்பாளர்கள் உள்பட சமூகதணிக்கை கிராம வள பயிற்றுநர்கள்,100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.
இதே போல் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் பொம்மையாபுரம் கிராம ஊராட்சியில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திலும் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.

