கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா


“இல்லம் தோறும் நூலகம்” என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் குறிக்கிறது. இது ஒரு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், வாசிப்பால் பயனடையவும் உதவுகிறது.
தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டிக் கிளைச் செயலாளர் பிரபுஜாய் இல்லத்தில் நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் 1800க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு நடைபெற்றது மரப்பாச்சி சொன்ன ரகசியம், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள், ஆதனின் பொம்மை, அம்மாவிற்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை, தன்வியின் பிறந்த நாள், சரஸ்வதிக்கு என்னாச்சு, 1650 முன்னொரு காலத்தில், ஒற்றைச் சிறகு ஓவியா, துணிச்சல் காரி, பிரேமாவின் புத்தகங்கள் மற்றும் போன்சாய் புத்தகங்களை பல்வேறு ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் திறனாய்வு செய்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.
நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ஆசிரியர் மணிமொழிநங்கை தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் பிரபு ஜாய் வரவேற்று பேசினார். எழுத்தாளர்கள் ராஜலட்சுமி நாராயணசாமி, தங்கதுரையரசி, பொன்னுராஜ், வரகவி முருகேசன், ராஜேஸ் சங்கரன் பிள்ளை, விநாயக சுந்தரி, ஆசிரியர்கள் சுரேஷ்குமார்,
தினகரன், ஜெனிபர், ஞான சங்கரி, ராஜா, மாரிச்சாமி, கலைவாணர் சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், கவிதா, சிறார்கள் கவின், தருண், ஹரிணி, அய்யனார் உள்ளிட்ட திரளானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இல்ல நூலகத்திற்கு பலர் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். கிளைப் பொருளாளர் ஆசிரியர் கண்ணகி நன்றி கூறினார்.


