அமலாக்கத்துறை சோதனை:’எல்2 எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.5 கோடி பறிமுதல்; இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27-ம் தேதி வெளியானது.
மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கோகுலம் சிட்பண்ட், நீலாங்கரை இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எம்புரான் படத்தின் இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, கோல்ட், ஜன கண மன, மற்றும் கடுவா ஆகிய மூன்று படங்களை கடைசியாக பிருத்விராஜ் தயாரித்து நடித்திருந்தார்.
இதில், பிருத்விராஜ் ஒரு நடிகருக்கான சம்பளத்தை பெறவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு இணை தயாரிப்பாளராக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி, இணை தயாரிப்பாளராக பிருத்விராஜ் சுமார் ரூ. 40 கோடி பெற்றதாக தெரிகிறது.
இதனையடுத்து இந்த 3 படங்களின் வருமான கணக்குகளை கேட்டு வருமான வரித்துறை பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு வருகிற 29-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
