இலுப்பையூரணி ஊராட்சி பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை ; வட்டாட்சியர் உறுதி

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி மறவர் காலனி, தாமஸ் நகர் பகுதிகளில் 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி தீர்வை ரசீது, மின் இணைப்பு, சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து தர வேண்டும்.
அவர்களது வீடுகளுக்கு பட்டா வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தாமஸ் நகர், மறவர் காலனி பகுதிகள் கால்நடை பராமரிப்பு துறை என்னும் பெயரில் உள்ளதால் அந்த துறையில் ஒப்புதல் பெற்று, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர். கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு,சிபிஐ நிர்வாகிகள் மற்றும் தாமஸ் நகர், மறவர் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
