பராசக்தி திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது; நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு
நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் ஆர்/. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி.. ‘
இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.
அந்தத் திரைப்படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் ஆட்சேபனை தெரிவித்தபோதும் , பெருமாள் முதலியார் பிடிவாதமாக சிவாஜி யை கதாநாயகனாக நடிக்கவைத்தார்.
தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர்திலகம் சிவாஜி , தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியாரிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் “பராசக்தி”.
பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறபப்ட்டுள்ளது.
___