• June 6, 2025

அண்ணா பல்கலை சம்பவம்: கோவில்பட்டியில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

 அண்ணா பல்கலை சம்பவம்: கோவில்பட்டியில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து. கோவில்பட்டியில் இன்று அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள், தமிழக அரசை கண்டித்தும், யார் அந்த சார் என்று கேள்விகள் எழுப்பியும், கோ பேக் ஸ்டாலின் என்றும் கோஷமிட்டனர். தொடர்ந்து கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 179 பேரை டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ”சாத்தியக்கூறு இல்லாத வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, 10 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. இதை மறைப்பதற்காக வெற்று விளம்பரங்களை கொண்டு ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
இந்த 4 ஆண்டுகளில் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மருத்துவக் கல்லூரி அல்ல, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கவில்லை. இதுதான் இந்த ஆட்சியும் லட்சணம்.
கலால் உள்ளிட்டவைகளில் இருந்து அதிக வருமானம் வருகிறது. ஆனால் 5.30 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளனர். போதைப் பொருள் நடமாட்டத்தால் தமிழக மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.
இதே போல் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட ஞானசேகரன் அந்தச் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ படமாக எடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில் சார் ஒருவர் பேசுகிறார் என்று வருகிறது. யார் அந்த சார் என்பது இதுவரை புலப்படவில்லை. மர்மமாக உள்ளது.
.இது போன்ற சம்பவங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் வரும் போது தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்த ஆட்சியே ஆட்டம் காணும் நிலை ஏற்படும். மனசாட்சி மற்றும் மனிதாபிமானம் உள்ளவராக இருந்தால் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
வருகிற 6 ம் தேதி கூடும் சட்டமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினைக்கு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம்,
‘இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *