வெள்ள பாதிப்பு: பிரதமரிடம் கேட்டது என்ன? மு.க.ஸ்டாலின் விளக்கம்

பெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 12 பேர் இந்த பெஞ்சல் புயலால் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், கடிதம் எழுதியதை தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். தற்போது புயல், வெள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் மோடியிடம் என்ன கேட்கப்பட்டது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார
இது தொடர்பாக மு.கஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்தேன்.
மேலும், தமிழ்நாட்டு மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றிய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
