மிகவும் பெருமையாக உள்ளது: மகாராஜாவிற்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த ஜுன் 14-ம் தேதி வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் ஓடிடி வெளியீட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்திய படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் தற்போது கிட்டத்தட்ட 40,000 ஸ்கிரீன்களில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மகாராஜா திரைப்பட குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில், “மகாராஜா படம் சீனாவில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த சாதனையை பற்றி பெருமைப்படுவதோடு, அங்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். எல்லைகளை கடந்து செல்லும் இப்படியொரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படகுழுவுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
