தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழக உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி. விஜயக்குமார் ஆய்வு நடத்தினார்.
வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம், புளியமரத்து அரசரடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை ஆட்சியர் க. இளம்பகவத் முன்னிலையில், ஆய்வு செய்த அவர், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் மையத்தில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் பல்வேறு தொழில் பயிற்சிகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, புளியமரத்து அரசரடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்ட அவர், மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் கல்விமுறைகள், பாடநூல்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாணவர்கள் எவ்வாறு தமிழில் எழுதப் படிக்கின்றனர்? ஆங்கிலத்தில் மாணவர்களின் திறன் எப்படி உள்ளது? அதற்கான பயிற்சிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார்.. அதில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான பயிலரங்கு தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜய நிர்மலா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொல்ணலதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.