மாநாட்டின் போது உயிரிழந்த தவெக தொண்டர்களின் குடும்பத்தினருக்கு விஜய் நிதியுதவி

விழுப்புரம், விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டிற்கு வருகை தரும் பொழுதும், மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பிய போதும் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த விஜய் கலை, சீனிவாசன் மற்றும் சென்னையை சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்து பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு தலைவர் விஜய் அறிக்கையின் வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை வரவழைத்து நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலையை பொருத்து நிதி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
