கோவில்பட்டி சொர்ணமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை: அறநிலையதுறை அதிகாரிக்கு கோட்டாட்சியர் உத்தரவு

கோவில்பட்டி சொர்ணமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலாத்தலமாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கோவில்பட்டியின் அடையாளங்களில் ஒன்றாக சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்குன்றின் அடிவாரத்தில் நிறைய வீடுகள் உள்ளன.
செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு உள்ளது. சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் மலைப்பகுதியின் பரப்பு 129 ஏக்கர், 34 சென்ட் ஆகும். இக்கோயில் மலைப் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன. கடந்த 2008-ம் ஆண்டு சுமார் 5 ஏக்கர், 4 சென்ட் நிலம் தனியார் பள்ளிக்கு தரை வாடகைக்கு விடப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாதம் ரூ.17.500 வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் . 27-ம் தேதி கோயில் மலைப்பகுதியில் சரள் மண் அள்ளிய ஜேசிபி, டிப்பர் லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அன்றைய தினமே பட்டா நிலத்தில்தான் சரள் மண் எடுக்கப்பட்டதாக கூறி, வாகனங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் போலீசார் விடுவித்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், குறிப்பிட்ட பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 2 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தற்போது, அறநிலையத் துறை அதிகாரிகள் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். நிலங்களை துல்லியமாக அளவீடு செய்யும் டி.ஜி.பி.எஸ். எனப்படும் கருவி மூலமாக அளவீடு நடைபெற்றது.
ஆக்கிரமிப்புகளை மீட்பது தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாகலட்சுமி, செண்பகவல்லி அம்மன் கோவில் அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி வட்டம். மற்றும் நகரம் சொர்ணமலை முருகன் கோவில் மற்றும் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மலையின் பூகோள அமைப்பு மற்றும் இயற்கை வளம் சிதைக்கப்படாமல் பாதுகாகத்து, சுற்றுலாத்தலமாக செயல்படுத்திடவும் கோரி மந்திதோப்பு க.தமிழரசன் என்ற மனுதாரரரிடம் இருந்து கோரிக்கை மனு வரப்பட்டுள்ளது,.
எனவே , சொர்ணமலை முருகன் கோவில் மற்றும் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அம்மலை மற்றும் அதைச்சார்ந்த பகுதிகளில் மணல், கல், சரள் அள்ளுவதற்கு நிரந்தர தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்திடக்கோரியும், மலையை சுற்றிலும் எல்லைக்கோடு அறியப்பட்டு மரங்கள் நட்டு பராமரித்திடக்கோரியும், மலையின் பூகோள- அமைப்பு மற்றும் இயற்கை வளம் சிதைக்கப்படாமல் பாதுகாகத்து, மேற்படி கோவில் மற்றும் அதைச் சார்ந்த பகுதியை சுற்றுலாத்தலமாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திடக்கோரியும், அளித்துள்ள மனுவினை உரிய நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு கோட்டாட்சியர் கூறி இருக்கிறார்.
