இந்தியா-நியூசிலாந்து 3-வது டெஸ்ட்: பும்ரா ஏன் இடம்பெறவில்லை – பிசிசிஐ விளக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை-வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி உள்ளது. இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இந்த போட்டியில் விளையாடவில்லை. உடல்நல கோளாறு காரணமாக அவர் விளையாடவில்லை என டாஸின் போது கேப்டன் ரோகித் சர்மா உறுதி செய்தார்.
இந்நிலையில் பும்ரா இடம்பெறாததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை” என்று பதிவிட்டுள்ளது.
இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. புனே டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூஸிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர், தசை பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் விளையாடவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.
