வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு: வணிகர்கள் கவலை

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனிடையே, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 4-வது மாதமாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மாற்றம் செய்யப்படுவது வழக்கம் என்பதால், இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. இதில் வீட்டு சிலிண்டர் விலை கடந்த மாதம், 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலை மாற்றம் செய்யப்படாமல், அதே விலையே நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை, 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக, வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது வணிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை செப்டம்பர் மாதம் ரூ.38 உயர்ந்து இருந்தது.
இதன் காரணமாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாதம் 1,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அக்டோபர் 1-ம் தேதி அன்று 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 48.50 ரூபாய் உயர்ந்தது. இதன்படி அக்டோபர் 1 முதல் 1,903 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதியான இன்று 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
