விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து கூறிய சுனிதா வில்லியம்ஸ்
உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஜூன் 7-ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அடுத்த 8 நாளில் சுனிதா உட்பட 2 வீரர்களும் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் மாத கணக்கில் விண்வெளியில் சிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது. தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 4 அமெரிக்கர்கள் மற்றும் 3 ரஷியர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விண்வெளி மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக நாசா விண்வெளி மையத்திலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில், உலகம் முழுவதிலுமிருந்து வெள்ளை மாளிகையில் இன்று ஒளியின் திருவிழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஐஎஸ்எஸ்-ல்(ISS) இருந்து., பூமியிலிருந்து 263 மைல் தொலைவில் தீபாவளியை கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பை பெறுவதாக கூறிய அவர், தீபாவளி மற்றும் பிற இந்திய பண்டிகைகளை பற்றி தனது தந்தை தனக்கு எப்படி கற்று கொடுத்தார் என்றும்., தனது இந்திய வேர்களை நினைவு கூர்ந்தார். அவர் தனது கலாச்சார வேர்களை வைத்து பகிர்ந்து கொண்டார் என்றும் கூறினார்.
மேலும் தீபாவளி பண்டிகையில் பங்கேற்றதற்காகவும், சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் வில்லியம்ஸ் நன்றி தெரிவித்தார்.