சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாரா? டி.ஜெயக்குமார் சவால்

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை, அவர் கார்பரேட் நிறுவனத்தின் மேலாளர் போல் செயல்படுகிறார் அரசியலில் கருத்து மாற்றம் இருக்கலாம் ஆனால் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அதிமுக பொதுச்செயலாளரை கடுமையாக விமர்சனம் செய்வதாக இருந்தது, அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தல் காலத்தில் மு.க.ஸ்டாலின் பாஜகவுக்கும், எங்களுக்கும் ரகசிய கூட்டணி என்று சொல்லும்பொழுது அண்ணாமலை எந்த இடத்திலும் மறுக்கவில்லை. திமுக பாஜக என்ற இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் ஒன்றாக சேர்ந்து ரகசிய கூட்டணி அமைத்துள்ளது.
அண்ணாமலை வெறும் 3 ஆண்டுகளாக தான் அரசியலில் உள்ளார். 2026 இல் ஆட்சி அமைக்கும் வல்லமை பெற்ற கட்சியின் பொதுச் செயலாளரை பற்றி பேச அவருக்கு தகுதி உள்ளதா?. கற்பனையில் இன்று அரசியல் செய்து வருகிறார்.
.ஆட்சி அமைப்பது என்பது எந்த காலத்திலும் பாஜகவுக்கு பகல் கனவு தான். தனித்து போட்டியிட்டால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது.
ஸ்டாலின், ரஜினிகாந்தை வைத்து துரைமுருகனை மட்டம் தட்டி உள்ளார். துரைமுருகன் ரஜினிகாந்தை மட்டம் தட்டியுள்ளார். ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு, ரஜினி பேசி, அதை உதயநிதி வழிமொழிந்தது “பத்த வைச்சுட்டியே பரட்டை” என்பதை போல் உள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். 264 படகுகள் இலங்கையில் மட்டும் உள்ளன. 34 மீனவர்கள் இன்னும் சிறையில் உள்ளார்கள். இவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?
சிறு தொழிலை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை.. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இப்போது இவர்கள் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார்கள். ஏற்கனவே சிங்கப்பூர், துபாய் சென்றார்கள்.அதைப்பற்றிய தகவல்கள் ஒன்றும் இல்லை. அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை கொடுங்கள்.நாட்டு மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஸ்டாலினால் யாரையும் நம்பமுடியவில்லை.அமைச்சரவை சகாக்களை கூட அவரால் நம்ப முடியவில்லை. ராஜ்நாத்சிங்கை அழைத்து வந்து பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றதா? பாமக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்த்துக்கொண்டு தான் இந்த வாக்குகளை பெற்றுள்ளார்கள். இல்லையெனில் நோட்டாவோடுதான் போட்டி போடுவீர்கள்..சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக தயாரா? ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா?
ஆர்.எஸ்.பாரதி இப்போதாவது எம்.ஜி.ஆர் பற்றிய அருமை பெருமைகளை உணர்ந்தாரே. புரட்சித்தலைவர் ஒரு சகாப்தம், அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. அவரின் அருமை பெருமையை ஆர்.எஸ்.பாரதி ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்..
