2026 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெறவேண்டும் ; திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

கோவில்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. நகர அவைத்தலைவர் பி.எம்.முனியசாமி தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் எம்.டி.ஏ.காளியப்பன், ச.அன்பழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா.உலகராணி, நகர பொருளாளர் வி.சி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் செ.ரவீந்திரன், எஸ்.புஷ்பராஜ், கோ.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி வரவேற்றார்.
வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் பேசியதாவது:-
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்து கொண்டுள்ளோம். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியை பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியை எடுக்க வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டுமென என்பதை இலக்காக வைத்து உழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்காக கட்சியின் வேர்களாக உள்ள தொண்டர்கள் களமாட வேண்டும்.
மக்களிடையே ஆதரவு பெருகி உள்ளது என்பதால் எதிர்கட்சிக்காரர்கள் எதையாவது பேசுவார்கள். குறிப்பாக பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதனால், மக்களை குழப்புவதற்காக பேசுவார்கள். அவர்கள் பேசும் அளவுக்கு ஆட்சி நடைபெறவில்லை. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். அதனால் எதிர்கட்சியினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
தொழிலாளர் நலவாரியம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தற்போது 31 தொழிலாளர் நலவாரியத்திலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உதவித் தொகைக்கு 1.50 கோடி பேர் விண்ணபித்திருந்தனர். இதில், 1.18 கோடி பேருக்கு மகளிர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொஞ்ச பேருக்கு பரிசீலனையில் உள்ளது. மீதமுள்ளவர்கள் வருமான வரி அட்டை வைத்துள்ளவர்கள், அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த திட்டம் அமைச்சர் உதயநிதியின் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அனைத்து மாணவ மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. லிங்கம்பட்டி, கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதைபோல் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-ம் ஆண்டு வெற்றியை நோக்கி அனைவரும் இலக்கை நோக்கி பயணிப்போம். இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.
கூட்டத்தில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய திமுக செயலாளர்கள் வீ.முருகேசன், கி.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.ராமர், இரா.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் தா.ஏஞ்சலா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கௌ.இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
