கள்ளக்குறிச்சி சாராய மரணம் :குஷ்பு தலைமையிலான குழுவினர் விசாரணை

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இதைதொடர்ந்து , கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு உள்பட 3 பேர் கொண்ட விசாரணை குழுவினர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினர் .போலீஸ் நிலையத்திலும் விசாரணை நடந்தது.
விசாரணை முடிவடைந்ததும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு குஷ்பு அறிக்கை அளிக்க வேண்டும்.
விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை குஷ்பு இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் குஷ்பு கூறியதாவது:-
விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்தது?
விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
