• June 6, 2025

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில், பிரதமர் மோடி, 45 மணி நேரம் தியானம் நிறைவு செய்தார்

 கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில், பிரதமர் மோடி, 45 மணி நேரம் தியானம் நிறைவு செய்தார்

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார். பகவதியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார்.

பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் தியான அறையில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார்.

ருத்ராட்ச மணிகளை உருட்டி, ஜெபம் செய்தபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார். பின்னர், கிழக்கு நோக்கிகைகூப்பியபடி சூரிய உதய காட்சியை தரிசித்தார். அப்போது மேகங்கள் இல்லாததால் அதிகாலை சூரியன் செந்நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. சூரிய ஒளியில் முக்கடல்களும் தங்கமாக ஜொலிப்பதை பிரதமர் ரசித்துப் பார்த்தார்.

மந்திரங்களை உச்சரித்தபடியே, தான் கொண்டு வந்த வெண்கலக் கெண்டியில் இருந்து கங்கை தீர்த்தத்தை சிறிது சிறிதாக கடலில் ஊற்றி, கங்கா வழிபாடு மற்றும் சூரிய உதயகால பூஜைகளை நடத்தினார்.

அதன்பிறகு விவேகானந்தர் மண்டபம் சென்ற பிரதமர், விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து சுமார் அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அங்கிருந்து தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார்.

அப்போது, அமைதியான சூழலில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை தியானம் முடிந்து ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது, பிரதமரின் உடல்நிலையை டாக்டர்கள்  பரிசோதித்தனர்.

மூன்றாம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை  பிரதமர் மோடி சூரிய உதய காட்சியை தரிசித்தார். பின்னர், தியானத்தை தொடர்ந்தார். பின்னர் 3 மணியளவில், தனது 45 மணி நேர தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *