தடுப்பு சுவரில் மோதி மினி பஸ் கவிழ்ந்தது; ஒகேனக்கல் சுற்றுலா வந்த 20 பேர் காயம்

சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா புறப்பட்டு வந்தனர்.
வாடகைக்கு எடுத்த மினி பஸ்சை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்பவர் ஓட்டினார்.
மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது.
இதனால் பஸ்சில் இருந்தவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து இறக்கி டீ வாங்கி கொடுத்து சிறிது நேரம் தூங்க சொல்லி உள்ளனர். அதற்கு டிரைவர் நானே பஸ்சை ஒட்டுவதாக சொல்லி இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து மினிபஸ் அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அரசு என்ஜினியரிங் கல்லூரி முன்பு வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் கலிமுல்லா உட்பட அனைவரும் காயமடைந்தனர். அவர்கள் வேதனையில் அலறி துடித்தனர்.
சாலையோரம் இருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 17 பேர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து மினி பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
